டாப்ஸியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இவருடைய படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 2) ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார். இந்தக் கதையில் டாப்ஸி நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று ஒரு வருடமாக அவருக்காகக் காத்திருந்துள்ளார் தீபக் சுந்தர்ராஜன்.
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு. இதற்காக விரைவில் ஜெய்ப்பூருக்குப் பயணிக்கவுள்ளார்.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து தமிழகம் திரும்பப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.