‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இயக்குநர்களின் அடுத்த வெப்சீரிஸ்

By ஏஎன்ஐ

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது.

ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் சிறந்த தொடரருக்கான எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.

இத்தொடரை ஒவ்வொரு எபிசோடுகள் வீதம் ஆலன் டைலர், டேவிட் பெனியாஃப், டி.பி. வெய்ஸ் உள்ளிட்ட 15 பேர் இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இயக்குநர்களான டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி. வெய்ஸ் இருவரும் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ள ‘தி த்ரீ பாடி ப்ராப்ளம்’ என்ற தொடரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு விருதுகளை வென்ற சீன நாவல் தொடரான ‘தி த்ரீ பாடி ப்ராப்ளம்’, ‘தி டார்க் ஃபாரஸ்ட்’, ‘டெத்’ஸ் எண்ட்’ ஆகிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் உருவாகவுள்ளது.

அறிவியல் புனைவு கதையைக் கொண்டு உருவாக்கப்படவுள்ள இத்தொடரை சீன மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு ஏற்றார்போல மாற்றியமைக்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இத்தொடருக்கான திரைக்கதையை டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி. வெய்ஸ் ஆகியோருடன் இணைந்து ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் சில எபிசோட்களுக்கு திரைக்கதையாசியராக பணியாற்றிய அலெக்ஸாண்டர் வூ என்பவரும் எழுதுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE