குழந்தைகள் புத்தகம் பற்றிய அறிவிப்பு - நெட்டிசன்களின் கேலிக்கு ஆளான கரண் ஜோஹர்

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் போடும் பதிவுகளின் பின்னூட்டங்களில் கூட கேலியும் கிண்டலுமே அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் கடமைகள் பற்றி தான் எழுதிய ‘தி பிக் தாட்ஸ் ஆஃப் லிட்டில் லவ்’ என்ற புத்தகத்தை பற்றிய அறிவிப்பை கரண் ஜோஹர் நேற்று வெளியிட்டார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘விசேஷமான ஒன்றை பற்றி உங்களுக்கு அறிவிக்க நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகளுக்கான என்னுடைய முதல் புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.

ஆனால் இந்த பதவிலும் வழக்கம்போல நெட்டிசன்கள் அவரை சாடத் தொடங்கி விட்டனர்.

அந்த பதிவின் பின்னூட்டத்தில் ட்விட்டர் பயனர் ஒருவர் ‘நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்கள், அதே போலத்தான் சுஷாந்த் மற்றும் கங்கணா ஆகியோரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்கள். எப்படி நீங்கள் உங்கள் அரசியல் மற்றும் செல்வாக்கை வைத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இன்னொரு பயனர் ‘நீங்கள் சுஷாந்த்தை கொலை செய்திருக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் பாலிவுட்டில் வாரிசு அரசியலை பரப்பியவர் நீங்கள் தான். மிக மோசமான நடிகர்களை எல்லாம் பாலிவுட்டில் உருவாக்கியுள்ளீர்கள். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தராததன் மூலம் அவர்களை கொன்றுவிட்டீர்கள்’ என்று சாடியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE