தனது பிறந்த நாளுக்குக் குவிந்த வாழ்த்துகளால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
நேற்று (ஆகஸ்ட் 31) தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
மேலும், அவருடைய ரசிகர்கள் பலரும் பிரத்யேக போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டார்கள். இதனால் #HBDYuvan, #HappyBirthdayYuvan உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகின.
தற்போது தனக்கு வந்த வாழ்த்துகள் குறித்து யுவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இறைவனின் அருளால், அற்புதமான மனிதர்கள் மற்றும் அன்பான ரசிகர்கள் எனக்கு ஆசீர்வாதமாகக் கிடைத்துள்ளனர். எனது பிறந்த நாளில் எனக்குக் கிடைத்த அன்பால் திக்குமுக்காடியுள்ளேன்.
பாடல்கள், ரத்த தானம், மாஷ் அப், நல உதவிகள் என உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்திய விதம் என்னை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குத் திருப்பித் தர என்னிடம் அதிக அன்பும், நிறைய நிறைய இசையையும் தவிர வேறெதுவும் இல்லை".
இவ்வாறு யுவன் தெரிவித்துள்ளார்.