பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் யானைக் கழிவு தேநீர் குடித்த அக்‌ஷய் குமார்

By ஐஏஎன்எஸ்

நடிகர் அக்‌ஷய் குமார் பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் யானைக் கழிவு தேநீரைக் குடித்திருக்கிறார். இதுகுறித்த காணொலி விளம்பரங்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

'இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்' என்கிற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. காடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, அந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்வது, உணவு சமைத்துச் சாப்பிடுவது, கரடு முரடான இடங்களில் பயணம் செய்து சாகசம் காட்டுவது என இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.

சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இப்படிப் பிரபலங்களைப் பங்கேற்க வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அப்படி அடுத்து வரும் பகுதியில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் தோன்றுகிறார். திங்கட்கிழமையன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் அக்‌ஷய் குமார். இதில் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து யானைக் கழிவில் போடப்பட்ட தேநீர் அருந்துவது, முதலைகள் நிறைந்த நீர்நிலையைத் தாண்டுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"இந்த நிகழ்ச்சியில் பல சவால்கள் இருக்கும் என நான் முன்னரே நினைத்திருந்தேன். ஆனால் யானைக் கழிவு தேநீரோடு பியர் க்ரில்ஸ் என்னை முழுமையாக ஆச்சரியப்படுத்திவிட்டார். என்ன ஒரு நாள்" என்று அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த மொத்த சாகசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்று முன்னோட்டத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE