'ஸ்டார் ஜோடிகள்' நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - சித்ரா விளக்கம்

By செய்திப்பிரிவு

'ஸ்டார் ஜோடிகள்' நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என்று சித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவி சீரியல்களில் மிகவும் பிரபலமானது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இவருக்கு சமூக வலைதளத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. இவருடைய பெயரில் ஆர்மி எல்லாம் இருக்கிறது. அந்தளவுக்கு சித்ரா பிரபலம். பலரும் இவரை சித்து என்றே செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

இவருக்கு சமீபத்தில் தான் சென்னை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் "ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் பங்கேற்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சித்ரா கூறியிருப்பதாவது:

"ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து நடனமாடத் தயாரானேன். எனவே நடனத்துக்காக ஆடைகளையும் பாடல்களையும் தயார் செய்தேன். ரிகர்சலுக்கும் செல்லும் நேரத்தில் சேனலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம் "மன்னியுங்கள், இது வேலைக்கு ஆகும் என்று தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த மேடை கிடைக்கும். இது உங்களுக்கான நேரம் இல்லை. உங்கள் மீது பரிதாபமாக உள்ளது" என்று கூறினார்கள்.

அதை கேட்டபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் பிறகுச் சரியாகி விட்டேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். என் மீது யாரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நல்ல வாழ்க்கையும், நிறைய அனுபவங்களும் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த அங்கீகாரம் இன்னும் என்னுடன் தான் இருக்கிறது. அதை என்னிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. விரைவில் நான் எழுவேன். தொடர்ந்து உயர்வேன். என்னை நானே பெருமைப் படுத்துவேன்"

இவ்வாறு சித்ரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE