என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்: விஜய் வசந்த் உருக்கம்

By செய்திப்பிரிவு

என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்று விஜய் வசந்த் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வசந்தகுமார் எம்.பி. (70) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக நேற்று (ஆகஸ்ட் 29) வைக்கப்பட்டது. காங்கிரஸார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்பு ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது வீட்டின் முன்பு வசந்தகுமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கும் அரசியல் பிரமுகர்கள், மக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) காலை 10 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 11:30 மணிக்கு இந்து முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமாரின் மனைவி மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இதில் விஜய் வசந்த் நடிகராக இருக்கிறார். அவருக்கு பல்வேறு திரையுலகினரும் ஆறுதல் கூறினார்கள்.

அப்பா உடல் அடக்கம் முடிந்தவுடன், விஜய் வசந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு என் அப்பா சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கனவு நனவானதும் அவர் தனது கிராமத்துக்கு ஓய்வெடுக்க ஒரு முழுமையான மனிதனாகத் திரும்பிச் சென்றுள்ளார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி."

இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE