இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 34 லட்சத்தைக் கடந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் பாலிவுட்டின் பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் வசிக்கும் கட்டிடத்துக்கு நேற்று (29.08.20) மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் வசிக்கும் பிரபுகன்ச் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதா என்று பலரும் எங்களிடம் தொலைபேசியில் கேட்டுவருகின்றனர். நாங்கள் வசிக்கும் கட்டிடத்தில் முதியோர்கள் பலர் இருப்பதால் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கட்டிடத்துக்கு சீல வைத்துள்ளனர். வழக்கமாக நாங்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கூட இந்த முறை மிகவும் எளிமையாக சமூக இடைவெளியுடனே கொண்டாடினோம்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக வரும் போலிச் செய்திகளை தயவுசெய்து நம்பவேண்டாம். நாங்கள் எங்கள் கட்டிடத்தில் வசிக்கும் அனைத்து முதியோர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கடவுளின் கிருபையாலும், உங்கள் அனைவரது வாழ்த்தாலும், எங்கள் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.