சுஷாந்த்தின் காதலி ரியாவிடம் நேற்று 2-ம் நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் அவர் வசித்து வந்தகுடியிருப்பில் கடந்த ஜூன்14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இந்நிலையில், சுஷாந்தின் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை புகார் கூறினார். மேலும் ரியாவின் குடும்பத்தினர் சுஷாந்தை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் பணத்தை பறித்துக் கொண்ட தாகவும் அவர் கூறியிருந்தார்.
சுஷாந்த் தற்கொலை வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ரியாவிடம் நேற்று 2-ம் நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வாட்டர்ஸ்டோன் ரிசார்ட்டில் சுஷாந்த்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், சுஷாந்த்தின் கிரெடிட் கார்டிலிருந்து ஏராளமான தொகை செலவழிக்கப்பட்டிருப்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் ரியாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பபடும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ரியாவின் சகோதரர் ஷோவிக், சுஷாந்த் வீட்டுப் பணியாளர் மற்றும் அருகில் வசிப்பவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.