அதிகபட்ச உற்சாகம் இதுதான்; அட்டகாசமாக உள்ளது: சமந்தா

By செய்திப்பிரிவு

தான் கர்ப்பமாக இருப்பதாக வரும் செய்திகளை நகைச்சுவையாகப் புறம் தள்ளியுள்ளார் நடிகை சமந்தா.

இன்று (ஆகஸ்ட் 29) சனிக்கிழமை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் தளத்தில் சமந்தா உரையாடினார். அதில் தான் அடுத்து நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் குறித்தும், தான் கர்ப்பமாக இருப்பது குறித்த செய்திகள் குறித்தும் பதில் கூறியுள்ளார்.

"நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா" என்று ஒரு ரசிகர் பதிவிட, அதற்கு சமந்தா, "ஆம். நான் 2017-ம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக இருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தக் குழந்தை வெளியே வர விரும்பவில்லை என நினைக்கிறேன்" என்று நகைச்சுவையாகப் பதில் கூறியுள்ளார்.

'தி ஃபேமிலி மேன் 2' பற்றிப் பேசுகையில், "எனது முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய அதிகபட்ச உற்சாகம் இதுதான். தொடருக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். அட்டகாசமாக உள்ளது" என்றார்.

கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து பச்சை குத்திக் கொண்டதைப் பற்றி பதில் சொன்ன சமந்தா, "எனது டாட்டூவுக்கு - நீங்களே உங்கள் யதார்த்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். நானும் என் கணவரும் இதைச் சேர்ந்து போட்டுக் கொண்டோம். எங்கள் இருவருக்குமே இது மிக விசேஷமானது" என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாகத் தமிழில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தா நடிக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE