கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார்.
வசந்தகுமாரின் திடீர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வசந்தகுமார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்தி:
''உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்.
» படப்பிடிப்புக்கு முன்பே 'சர்கார்' பிரச்சினையைக் கணித்த விஜய்: ரகசியம் பகிரும் ஏ.ஆர்.முருகதாஸ்
» நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்
விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் எனத் தொடங்கி வைத்தவர்.
கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தைக் கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்.
குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர்.
சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை.
ஏற்க முடியாத இழப்பு இது. மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள விஜய் வசந்த் மற்றும் வினோத் குமார் இருவரும் தோள் சாய்ந்துகொள்ள தோழனாக நான் நிற்பேன்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரை இழந்து வாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்''.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.