புதிய காட்சிகள் சேர்த்து மீண்டும் வெளியாகவுள்ள அர்ஜுன் ரெட்டி

By செய்திப்பிரிவு

'அர்ஜுன் ரெட்டி' படத்தில் புதிய காட்சிகள் எல்லாம் சேர்த்து, 2022-ம் ஆண்டு மீண்டும் வெளியாகவுள்ளது.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூலமே முன்னணி நாயகனாக மாறினார் விஜய் தேவரகொண்டா.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கைப் போலவே இந்தியிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தெலுங்கில் இந்தப் படத்தின் முதல் எடிட் 4 மணி நேரம் 20 நிமிடமாக இருந்தது. அதற்குப் பிறகு இவ்வளவு நீளமாக எப்படி வெளியிட முடியும் என்று மீண்டும் எடிட் செய்து 3 மணி நேரம் 45 நிமிடங்களாகக் குறைத்தார்கள். இன்னும் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து இறுதியாக 3 மணி நேரம் 6 நிமிடங்களாக படம் வெளியானது.

தற்போது இந்தப் படத்தின் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்ட பதிப்பை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் 3-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது படக்குழு. அப்போது 5-ம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் பதிப்பு வெளியாகும் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிப்பில் அர்ஜுன் ரெட்டியின் குழந்தைப் பருவம், நாயுடனான அவரது நட்பு உள்ளிட்ட பல காட்சிகள் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE