'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் பார்த்திபன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.
சசிகுமார், ஆர்யா, சரத்குமார், சிம்பு எனப் பலருடைய பெயர்கள் 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது, இந்த ரீமேக்கில் கார்த்தி - பார்த்திபன் இருவரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
» கடவுள் உங்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்க்க விரும்புகிறேன் - ரியாவை சாடிய சுஷாந்த்தின் சகோதரி
இந்தச் செய்தி குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனைத் தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே.."
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் நடிக்க பார்த்திபனை யாரும் அணுகவில்லை என்பது தெளிவாகிறது.