கடவுள் உங்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்க்க விரும்புகிறேன் - ரியாவை சாடிய சுஷாந்த்தின் சகோதரி

By ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நேற்று (28.08.20) ரியா தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுஷாந்த்தின் குடும்பத்தினர் அவரை கைவிட்டதால் அவர் போதைக்கு அடிமையாகியிருந்ததாகவும், தான் அவரை அதிலிருந்து மீள உதவி செய்ததாகவும் கூறியிருந்தார்.

ரியாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் சுஷாந்த்தின் சகோதரியான ஸ்வேதா சிங் இதற்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘என் அண்ணன் இறந்தபின்பும் கூட ஒரு தொலைகாட்சி பேட்டியில் அவரது பெயரை கெடுக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல். நீங்கள் செய்தவற்றையெல்லாம் கடவுள் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா? நான் கடவுளை நம்புகிறேன். அவர் உங்களுக்கு கொடுக்கும் தண்டனையை நான் பார்க்க விரும்புகிறேன்.

இந்த பெண்ணை என் அண்ணன் சந்தித்திருக்கவே கூடாது என்று விரும்புகிறேன். ஒருவருக்கு அவருடைய அனுமதியில்லாமலே போதைப் பொருட்களை கொடுத்து பின்னர் அவரிடம் சென்று உனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என்ன மாதிரியான நடிப்பு இது.

அந்த பேட்டியில் ரியா குறிப்பிட்டது போல், நாங்கள் எங்கள் சகோதரனை நேசிக்கவில்லை தான். அதனால் தான் அவர் சண்டிகருக்கு செல்கிறார், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் ஜனவரி மாதமே வேலை, குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்தோம்.

இவ்வாறு ஸ்வேதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE