மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கேகே சிங், சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
கேகே சிங் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் ரியா மற்றும் அவரது கூட்டாளிகளை சிபிஐ கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
"ரியா நீண்ட நாட்களாக என் மகன் சுஷாந்துக்கு விஷம் கொடுத்து வந்திருக்கிறார். என் மகனைக் கொன்ற கொலையாளி ரியா தான். ரியாவும் அவரது கூட்டாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று கேகே சிங் பேசியுள்ளார்.
சுஷாந்தின் மரணம் பற்றி சிபிஐ விசாரணை செய்து வருகிறது. பாலிவுட், கிரிக்கெட், போதை மருந்துகள், துபாய் நிழலுலகம் என பல தரப்புகள் சுஷாந்தின் மரணத்துக்குப் பின்னால் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் உலவி வருகின்றன.
முன்னதாக, கடந்த ஜூன் 14 அன்று சுஷாந்த் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் இறந்த சில நாட்களிலேயே, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது ரியாவும் அவரது குடும்பத்தினரும் தான் என்று கேகே சிங் புகார் அளித்திருந்தார். பண மோசடி வழக்கும் ரியா மீது போடப்பட்டுள்ளது.