அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் ஷாரூக்கான்: அட்லி படம் எப்போது?- புதுத் தகவல்கள்

அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு முன்பாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஷாரூக்கான்.

'பிகில்' படத்தை முடித்துவிட்டு மனைவியுடன் வெளிநாட்டுக்குப் பயணமானார் இயக்குநர் அட்லி. நீண்ட நாட்கள் கழித்தே சென்னை திரும்பினார். மேலும், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமலேயே இருக்கிறார்.

மேலும், 'பிகில்' படப்பிடிப்பின்போதே அடுத்து ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்குவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இன்னும் அறிவிக்கப்படவில்லை. 'ஜீரோ' படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாரூக்கானும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ஷாரூக்கான் - அட்லி கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது. படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களும் பேசி முடிவாகிவிட்டது. ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ஆனால், ஏன் இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள் என்பது குறித்து விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு, அனைத்தையும் தயார் செய்தபோதுதான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைத்தார்கள். இதற்கு இடையே, முன்னணி நிறுவனமான யாஷ் ராஜ் நிறுவனம், ஷாரூக்கானிடம் புதிய படத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஏனென்றால், இது யாஷ் ராஜ் நிறுவனத்துக்கு 50-வது வருடமாகும். மேலும் ஷாரூக்கானின் பல வரவேற்பு பெற்ற படங்களை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த யாஷ் சோப்ரா, ஷாரூக்கானுக்கு மிக நெருங்கிய நண்பர். இந்நிறுவனம் புதிய படத்துக்குக் கேட்டபோது ஷாரூக்கானால் மறுப்பு தெரிவிக்க இயலவில்லை.

சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'வார்' படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். 'பதான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவுள்ளது. ஆகையால், இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அட்லி படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஷாரூக்கான்.

அட்லி படத்தை கைவிட்டுவிட்டார் என்று வெளியான வதந்திகள் எதுவுமே உண்மையல்ல. அட்லி படத்துக்கு முன்பாக சித்தார்த் ஆனந்த் படத்தை முடிக்கவுள்ளார் ஷாரூக்கான் என்பதுதான் புதிய தகவல். ஷாரூக்கான் - அட்லி கூட்டணி தொடர்பான அறிவிப்பு, யாஷ் ராஜ் நிறுவனத்தின் பட அறிவிப்பு முடிந்தவுடன் எப்போது என்பது தெரிந்துவிடும்.

அட்லி படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் ஷாரூக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE