'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர் சஷிகாந்தின் ட்வீட்டால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் நிலைமை சீராகும் வரை திரையரங்குகள் திறக்க வாய்ப்புகள் குறைவு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இதில் உள்ள படங்களின் பட்டியலில் 'ஜகமே தந்திரம்' படமும் இருந்தது. இது தனுஷ் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்துள்ளனர். சஷிகாந்த் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியானது தொடர்பாக, தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஜகமே தந்திரம் - ஜகம் இன்னும் குணமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அதுவரை திரையரங்குகள் திறக்கப் பொறுமையாக இருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். ஒட்டுமொத்தக் குழுவும் பெரிய திரையில் ரகிட ரகிட என தனுஷ் ஆடும் ஆட்டத்தைக் காண ஆர்வமாக இருக்கிறது."
இவ்வாறு சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு தனுஷ் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில திரையரங்க உரிமையாளர்களும் சஷிகாந்தின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.