'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதால், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமானது படக்குழு. ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு என்றும் அறிவித்தது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) பெங்களூருவில் உள்ள ஸ்டுடியோவில் 10 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். இதன் புகைப்படங்களைப் படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது 'கே.ஜி.எஃப்' ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இந்திய அளவில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படப்பிடிப்புடன் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியைத் தவிர, இதர காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சஞ்சய் தத் முழுமையாக குணமாகித் திரும்பியவுடன், அவருடைய காட்சிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE