'சூர்ப்பனகை' படத்துக்கு முன்பாக ரைசா வில்சன் நடித்துள்ள புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் ராஜு
'கண்ணாடி' படத்தை முடித்துவிட்டு, ரெஜினா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சூர்ப்பனகை' படத்தை இயக்கி வந்தார் கார்த்திக் ராஜு. தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இதன் படப்பிடிப்பின் போது தான் கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற சூழல் தெரியாமல் இருந்தது. இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் சின்ன குழுவினரோடு புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் ராஜு.
இந்தப் படம் தொடர்பாக கார்த்திக் ராஜு கூறியிருப்பதாவது:
"வேல்ராஜ் சார் (ஒளிப்பதிவாளர்), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் (இசையமைப்பாளர்), சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய 'சூர்ப்பனகை' படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்"
இவ்வாறு கார்த்திக் ராஜு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் 'சூர்ப்பனகை' படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார் கார்த்திக் ராஜு.