நான்  'செம்பருத்தி' சீரியல்ல நடிக்கிறேன்னு ராதிகாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்! - மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த மனோபாலா!   

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியல் வழியே மீண்டும் சின்னத்திரை நடிகராக களத்தில் இறங்கியுள்ளார், மனோபாலா. இயக்குநர் சுந்தர்.சியின் நண்பர் என்பதால் அவரது தயாரிப்பில் வெளிவரும் சீரியல்களில் அவ்வபோது முகம் காட்டி வந்த நிலையில் தற்போது 'செம்பருத்தி' தொடரில் ஒப்பந்தமாகியிருப்பது சீரியல் பார்வையாளர்களைக் குஷியாக்கியுள்ளது.

இந்த புதிய பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "அரிதாரம் பூசிப் பழகினவன்... கொஞ்ச நாள் அதை பூசாமா இருந்துட்டா அதுவே நரகம் மாதிரி ஆகிடும். அந்த மாதிரி இந்த லாக் டவுன்ல எவ்ளோ நாளைக்குத்தான் நடிக்காக வீட்லயே முடங்கிக் கிடக்க முடியும்? அதான்.. நல்ல சீரியல் கதைக்களம் அமைந்ததும் கேமரா முன்னாடி ஓடி வந்துட்டேன். எப்பவுமே நண்பர் சுந்தர்.சி தான் எடுக்குற எந்த படமா இருந்தாலும் அதுல நமக்குன்னு ஒரு ரோல் ஒதுக்கி வச்சிடுவார். அந்த அன்புலதான் அவரோட தயாரிப்புல வர்ற சீரியல்களிலும் தவிர்க்காம நடிப்பேன்.

மற்றபடி பெருசா என்னை சிரீயல்கள்ல பார்த்திருக்க முடியாது. இப்போ, இந்த 'செம்பருத்தி' சீரியலோட என் பங்கு கதைக்களமும், அடுத்தடுத்து அது நகர்த்து செல்லும் போக்கும் வலுவானதாக இருந்ததால உடனே ஒப்புக்கொண்டேன். அதுவும் இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு என்னோட ரோல் ரொம்பவே பவர்ஃபுல்லா மாறப்போகுது. எனக்கும் காமெடி, காமெடின்னு ஒரே ட்ராக்ல எவ்ளோ நாளைக்குத்தான் ஓடிக்கிட்டே இருப்பது. அதான் ஒரு மாற்றம் இருக்கட்டுமேன்னு இந்த ப்ராஜக்ட்ல கமிட் ஆகிட்டேன்.

இந்த சீரியலுக்குள்ள வர்ற வரைக்கும் இது நம்பர் ஒன் சீரியல் என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. தினம் தினம் ஷூட்டிங் போய்ட்டு திரும்பும்போது, 'இப்போ என்ன ஷூட்டிங்'னு சிலர் கேட்குறாங்க. அப்போ சொன்னப்போதான்... எல்லாரும் பயங்கரமா பாராட்ட ஆரம்பிக்கிறாங்க. நான் வேற சின்னத்திரை நடிகர் சங்கத்துல உபத் தலைவரா இருக்குறதுனால... அதுல நமக்கு இன்னும் பாசிடிவ்வாக பெயர் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.

'செம்பருத்தி' சீரியல்ல நான் நடிக்க வந்தது இன்னும் ராதிகா மாதிரியான நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியாது. அது தெரிஞ்சா அவ்ளோதான். என்னை விடவே மாட்டாங்க. அவங்க எல்லாம் 8000 அத்தியாயங்களுக்கும் மேல நடித்து சின்னத்திரையில கொடி கட்டி பறக்குறவங்க. ஏன்... என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல, 'நானும் சீரியல் எடுக்குறேன்ல!'ன்னு கம்பை எடுத்துக்கிட்டு அடிக்க வந்துடுவாங்க. அதெல்லாம் இனி சமாளிச்சாகணும்!

இந்த சீரியலுக்கு நடுவே எட்டு, ஒன்பது படங்களும் நடிக்க ஒப்பந்தமாகி வச்சிருக்கேன். ரஜினியோட 'அண்ணாத்த' படத்துல இருந்து அடுத்து ஏ.ஆர்.முருதாஸ் எடுக்கப்போகுற படம் வரைக்கும் லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கு. நான், டெல்லிகணேஷ் மாதிரியான ஆட்களெல்லாம் சின்னத்திரை, பெரியதிரைன்னு ஒரே நேரத்துல ரெண்டுலயும் அழகா பயணிக்கலாம். யாரும் எதையும் சொல்ல மாட்டாங்க. ரசிகர்களும் ரெண்டு இடங்களிலும் நல்ல வரவேற்பை கொடுப்பாங்க. அதான் இனி ரெண்டுலயும் சலங்கையைக் கட்டிக்கிட்டு ஓடுவோம்!'' என்கிறார், மனோபாலா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE