அக்டோபரில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடக்கம்?

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் துவங்க மணிரத்னம் திட்டமிட்டு வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

இந்தக் கூட்டணியில் சின்ன பழுவேட்டரையராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிழல்கள் ரவி. அவருடைய காட்சிகளை மத்தியப் பிரதேசத்தில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தார்கள் என்றும், கரோனா அச்சுறுத்தலால் அது கைவிடப்பட்டது என்று நிழல்கள் ரவி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதத்தில் அந்தக் காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பது உறுதியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE