'வி' திரையரங்கிலும் வெளியாக வாய்ப்பு: நானி தகவல்

By செய்திப்பிரிவு

'வி' படம் திரையரங்கிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக நானி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'. இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும்.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், 'வி' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை (ஆகஸ்ட் 26) வெளியாகவுள்ளது.

'வி' படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்ந்தெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். தற்போது 'வி' படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் நானி.

அதில், 'வி' திரையரங்கிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நானி. அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

"படத்தின் படப்பிடிப்பு, டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு என பல நேரங்களில், எப்படி இந்தக் காட்சியை அரங்கில் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நாங்கள் பேசியிருக்கிறோம். திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் 'வி' திரைப்படத்தைத் திரையிட வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக திரையரங்க அனுபவத்துக்காகப் படத்தை மீண்டும் பார்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். இப்போதைக்கு, படம் அமேசான் ப்ரைமில் வெளியானவுடன் இணையத்தில் வரப்போகும் கருத்துகளைத் தேடிப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு ஒரு தனித்துவமான கதாபாத்திரம் உள்ளது. படம் தனித்துவமான ஒரு வெளியீட்டைப் பெறுகிறது"

இவ்வாறு நானி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE