எஸ்பிபி விரைவில் குணமடையப் பிரார்த்தனை: மம்மூட்டி

By செய்திப்பிரிவு

எஸ்பிபி விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாக மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது எஸ்.பி.பி தொடர்பாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"எஸ்பிபி விரைந்து குணமடைய என்னுடைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். இரண்டு எவர்க்ரீன் படங்களில் அவருடைய அற்புதமான குரலுக்கு வாயசைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. 'ஸ்வாதிகிரணம்' மற்றும் 'அழகன்'. இறைவன் அவரை மீண்டும் குணமடையச் செய்து நமக்கு இன்னும் அதிக பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் தருவதற்கு வலிமையையும் அவருக்கு வழங்க வேண்டும்".

இவ்வாறு மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE