'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'டிக்கிலோனா' படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் யோகி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் சந்தானம் நடித்துள்ள படம் 'டிக்கிலோனா'. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பல படங்கள் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வரிசையில் 'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'டிக்கிலோனா' படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன என்றும், ஜீ 5 நிறுவனம் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
» சுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா
» அடுத்த ஆண்டு வெளியாகிறது சைஃப் அலிகானின் சுயசரிதை புத்தகம்
இந்தச் செய்தி வைரலாகப் பரவத் தொடங்கியதால், கே.ஜே.ஆர் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"உண்மையில்லை. நாங்கள் அனைத்து முக்கிய ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எதுவும் இன்னும் இறுதியாகவில்லை. எங்கள் திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நாங்களே நேரடியாகத் தருவோம். தயவுசெய்து காத்திருங்கள்."
இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தயாரிப்பாளரின் ட்வீட்டால் இந்த இரண்டு படங்களுமே ஓடிடி வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது.