தனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தற்போது இவருடைய நடிப்பில் 'பூமி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'ஜன கன மன' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவருக்கு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்த நாளாகும். இதற்காக அவருடைய ரசிகர்கள் தயாராக தொடங்கினார்கள். இதனிடையே தனது பிறந்த நாள் தொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜெயம் ரவி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது.
» அப்பாவைப் பார்த்தேன்; மீண்டும் நம்மிடம் வருவார்: எஸ்பிபி சரண் நம்பிக்கை
» ராம் கோபால் வர்மாவின் மர்டர் திரைப்பட உருவாக்கத்துக்கு தெலங்கானா நீதிமன்றம் தடை
ஆனால் இந்த வருடம் உலகளாவிய கரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.
கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்"
இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.