'சூர்யவன்ஷி' மற்றும் '83' ஆகிய இரு படங்களை ஓடிடியில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகி வெளியாகாமல் இருக்கும் படங்கள் 'சூர்யவன்ஷி' மற்றும் '83'. இந்த இரண்டு படங்களின் தயாரிப்புகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது ரிலையன்ஸ் நிறுவனம்.
இதில் 'சூர்யவன்ஷி' படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். அக்ஷய் குமார், கத்ரீனா கைஃப், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். '83' படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு படங்களுக்குமே இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு படங்களும் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு வரை, இரு படக்குழுக்களும் ஓடிடி வெளியீடு சாத்தியமில்லை என்றே பேட்டியளித்து வந்தன.
» அமேசான் ப்ரைம் தளத்தில் 'சூரரைப் போற்று' ரிலீஸ் ஏன்? அடுத்தடுத்த திட்டங்கள்?- சூர்யா விளக்கம்
இதனிடையே இன்று (ஆகஸ்ட் 22) ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷிபாசிஸ் சர்கார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'சூர்யவன்ஷி' மற்றும் '83' ஆகிய படங்களை 100 சதவீதம் திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்யவுள்ளோம் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் ரிலீஸ் தேதியை மேற்கொண்டு தள்ளிவைக்க நாங்கள் விரும்பவில்லை.
திரையரங்குகள் திறப்பு குறித்த நிச்சயமின்மை தொடர்ந்தால், திரையரங்கு வெளியீடு மற்றும் டிஜிட்டலில் வெளியீடு ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் அனைத்து வழிகள் குறித்து நாங்கள் எங்களுடைய இயக்குநர்கள், நடிகர்கள், பங்குதாரர்கள் ஆகியோர்களுடன் ஆலோசிப்போம்.
நிச்சயமாக ரிலீஸ் தேதியை மேற்கொண்டு தள்ளிவைக்க நாங்கள் விரும்பவில்லை. எனினும், ரசிகர்கள் இந்தப் படங்களை தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் அன்று பெரிய திரையில் காண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது".
இவ்வாறு ஷிபாசிஸ் சர்கார் தெரிவித்துள்ளார்.
இவருடைய ட்வீட்களை வைத்துப் பார்க்கும்போது, 'சூர்யவன்ஷி' மற்றும் '83' ஆகிய படங்கள் ஓடிடி வெளியீடு சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருவது தெளிவாகிறது. இவருடைய ட்வீட் பாலிவுட் வர்த்தக நிபுணர்கள் தரப்பில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.