ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூரரைப் போற்று

By செய்திப்பிரிவு

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் 'சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்திப் பணிகளும் முடிவடைந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் உள்ளது.

இதனிடையே 'சூரரைப் போற்று' படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. இதனால் திரையரங்கில்தான் வெளியாகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக 'சூரரைப் போற்று' படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியான படங்களின் வரிசையில் 'சூரரைப் போற்று' படத்தின் பொருட்செலவுதான் அதிகம்.

அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து, 'சூரரைப் போற்று' படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE