கங்கணா ஒன்றும் சுஷாந்தின் பிரதிநிதியல்ல: சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் கருத்து

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சாடிப் பேசி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கங்கணா, சுஷாந்தின் பிரதிநிதி இல்லை என்று சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கங்கணா சுஷாந்தின் தோழியுமல்ல. அவரது பிரதிநிதியுமல்ல. அவர் எழுப்பும் பிரச்சினை சரியானதுதான். ஆனால் அவர் இந்த வழக்கை எடுத்து நடத்தவில்லை. அவர் திரைத்துறையில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறார். அவர் சுஷாந்துக்காக எதையும் செய்யவில்லை. மாறாக அவருக்காக இதையெல்லாம் செய்கிறார்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE