ஆகஸ்ட் 26 முதல் 'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பு தொடக்கம்

'கே.ஜி.எஃப் 2' படத்தின் இதர காட்சிகள் படப்பிடிப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்க 'கே.ஜி.எஃப் 2' படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள ஸ்டூடியோவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதோடு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியைத் தவிர, இதர காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சண்டைக் காட்சிக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி முடிந்தவுடன், அதன் படப்பிடிப்பையும் தொடங்கி படக்குழு முடித்துவிடும் எனத் தெரிகிறது.

தற்போது சஞ்சய் தத் தனது ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பின்னடைவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் முழுமையாக முடிந்து குணமடைந்தவுடன், அவரை வைத்து 3 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தவும் 'கே.ஜி.எஃப் 2' படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே அக்டோபர் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டது 'கே.ஜி.எஃப் 2' படக்குழு. தற்போது இந்த தேதியில் வெளியீடு சாத்தியமில்லை என்பதால் புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE