ஹ்ரித்திக் ரோஷன் குறித்த கருத்து - ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான கங்கணா

By ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணவத் தொடர்ந்து சாடிப் பேசி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘கேதர்நாத்’ படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சுஷாந்த் மற்றும் சாரா அலி கான் இருவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் சாரா அலி கான் சுஷாந்த் உடனான காதலை முறித்துக் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்றதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. சிபிஐ போலீஸார் இது குறித்து சாரா அலிகானிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலரும் கூறிவந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறும்போது, ‘சுஷாந்த் மற்றும் சாரா குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் அப்போது வெளியானது. ஏன் இந்த நட்சத்திர குழந்தைகள் வெளிநடிகருக்கு இப்படி ஆசை காட்டி மோசம் செய்கிறார்கள்? அதன் பிறகு ஏன் சுஷாந்த் ஒரு பிணந்தின்னி கழுகிடம் மாட்டிக் கொண்டார் என்பதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை’ என்றார்.

இந்த பதிவை வைத்து நட்சத்திர குழந்தை என்று சாரா அலி கானையும், பிணந்தின்னி கழுகு என்று ரியாவையும் கங்கணா குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய இன்னொரு பதிவில், ‘சாரா அவரை உண்மையாக காதலித்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். சுஷாந்த் ஒரு பெண் தன்னிடம் உண்மையாக இருக்கிறாளா இல்லையா என்பதை கூட அறியாத முட்டாள் இல்லை. சாராவுக்கு அழுத்தம் ஏறப்பட்டிருக்கக் கூடும். நானும் ஹ்ரித்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் இப்போது ஏன் ஒரு எதிரியைப் போல நடந்து கொள்கிறார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது’ என்று கூறியிருந்தார்.

கங்கணாவின் இந்த கருத்தால் கோபமடைந்த ஹ்ரித்திக் ரசிகர்கள் அவரை ட்விட்டர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பப்ளிசிட்டிக்காக அடுத்தவருடைய பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கங்கணாவின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE