அவர் ரசிகன் நான், என்னுடைய அடுத்த படத்தில் அவர் பாடனும்: சிவராஜ் குமார் வேண்டுதல்

By செய்திப்பிரிவு

அவர் ரசிகன் நான், என்னுடைய அடுத்த படத்தில் அவர் பாடனும் என்று எஸ்.பி.பி குறித்து சிவராஜ் குமார் ட்வீட் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பாரதிராஜா, ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர், பொது மக்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.

தற்போது எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய முதல் படத்திலிருந்து, நீங்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் பல்வேறு படங்களில் குரல் கொடுத்துள்ளீர்கள். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன், நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அனைவரது படங்களிலும் பாட நீங்கள் விரைவில் திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் பாடக் காத்திருக்கிறேன்"

இவ்வாறு சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் தன்னுடைய படங்களில் தானே பாடியவர், மிகப்பெரிய இசை பாரம்பரியம் கொண்டவர். அவருடைய மகனின் முதல் படத்தில் அவருக்காக எஸ்பிபி குரல் கொடுத்தார். இதை அவர் மறக்காமல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE