எஸ்பிபி உடல்நிலைக் குறித்து தேசிய, சர்வதேச மருத்துவர்களுடன் ஆலோசனை செய்வதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் சேர்ந்து, கலந்தாலோசித்து எங்கள் மருத்துவர் குழு இயங்கி வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது"
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.