என் ஆயுளைக் கூட பாலுவுக்குக் கொடுக்கிறேன்: சரோஜா தேவி உருக்கம்

By செய்திப்பிரிவு

என் ஆயுளைக் கூட பாலுவுக்குக் கொடுக்கிறேன் என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரதிராஜா, இதில் ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பல்வேறு பிரபலங்கள் எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி அறிக்கைகள், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

"பாலுவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் நல்ல மனிதர். நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது 'நீங்கள் என்ன தேன் சாப்பிடுகிறீர்களா' என்று கேட்பேன். 'ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்' எனக் கேட்பார். 'உங்கள் குரல் அவ்வளவு இனிமையாக இருப்பதால் கேட்டேன்' என்று பதில் சொன்னேன். 'நீங்கள் மட்டும் என்ன அழகாக இல்லையா' என்று சொல்வார் பாலு.

தற்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்பதைத் தெரிந்து, ஒட்டுமொத்த இந்தியாவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் ஆயுளைக் கூட அவருக்கே கொடுத்துவிடு என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்ல குணமடைந்து வந்து, மறுபடியும் பாட வேண்டும். பல வருடங்களுக்கு அவர் பாடிக் கொண்டிருக்க வேண்டும். இதைத் தான் கடவுள்கிட்ட வேண்டிக் கொண்டிருக்கிறேன்."

இவ்வாறு சரோஜா தேவி பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE