ஜான்வி கபூரை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ படம் எழுதப்பட்டிருப்பதாக முன்னாள் கப்பற்படை அதிகாரி சந்தியா சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்காக ஜான்வி கபூர், குஞ்சன் சக்ஸேனாவுடன் சில நாட்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 12 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ படத்தில் வரும் சில காட்சிகளும், வசனங்களும் இந்திய விமானப்படை குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தர்மா புரொடக்ஷன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவற்றுக்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியது.
» பிரபல பாடகிக்கு கரோனா தொற்று: ரியாலிட்டி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது பரவியதாக தகவல்
இந்திய விமானப் படையில் பாலின பேதம் இருப்பதாக வரும் காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான சந்தியா சூரி ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு அதிகாரியாக இப்படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இப்படத்தின் ட்ரெய்லரில் குஞ்சன் சக்ஸேனாதான் இந்திய விமானப்படையில் பறந்த முதல் பெண் விமானி என்று கூறப்படுகிறது. அதுவே முதலில் தவறான தகவல். அடுத்தபடியாக அவர் துன்பம் மற்றும் கிண்டல்களை அனுபவிப்பது போல காட்டுவதன் மூலம் இந்திய விமானப்படையின் மீது தவறான பிம்பம் ஏற்படுகிறது. அதில் காட்டப்பட்டிருப்பது போல எதுவும் நடக்கவில்லை. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஜான்வி கபூர் என்ற ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடனே எழுதப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சந்தியா கூறியுள்ளார்.