குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை

By ஐஏஎன்எஸ்

நடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் பதிவுகளை பகிர்ந்து வருபவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய கல்வி கொள்கையை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் குஷ்பு. இதனால் அவர் விரைவில் பாஜகவில் சேரப்போவதாக ட்விட்டரில் தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல்களுக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் குஷ்புவுக்கு நேற்று (20.08.20) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நண்பர்களே... இன்று காலை என் கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில நாட்களுக்கு சமூகவலைதளங்களில் இயங்க மாட்டேன். விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதியளிக்கிறேன். வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

குஷ்பு விரைவில் குணமடைய பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE