நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்த விசாரணையை சிபிஐ நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
ஆகஸ்ட் 18 அன்று, சுஷாந்தின் சகோதரி ஷ்வேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணம் குறித்த விசாரணையை சிபிஐ நடத்துவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் முடிவை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். தனது கோரிக்கையை, செவ்வாய் அன்று, சமூக ஊடகம் வழியாகப் பதிவு செய்தார்.
தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை, சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஹாரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது செல்லுபடியாகும் என்றும், சிபிஐ விசாரணையைக் கோர பிஹாருக்கு உரிமையுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி, இந்த முதல் தகவல் அறிக்கை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.