சூப்பர் ஹீரோ கதைகளில் புதிதாக எதையுமே உருவாக்க முடியாத அளவிற்கு எக்கச்சக்கமான சூப்பர் ஹீரோக்கள், திரைப்படங்களில் உலா வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குறுகிய கால இடைவெளியில் இரண்டு சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு, அதில் ஓரளவிற்கு வெற்றியும் ஈட்டியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். கடந்த ஜூலை மாதம் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘தி ஓல்டு கார்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த சூப்பர் ஹீரோ படைப்பாக ‘ப்ராஜெக்ட் பவர்’ படம் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பாராநார்மல் ஆக்டிவிட்டி 3’, ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி 4’, ‘நெர்வ்’ போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஏரியல் ஷுல்மேன் மற்றும் ஹென்றி ஜூஸ்ட் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். ஜேமி ஃபாக்ஸ், ஜோசப் லெனார்ட் கோர்டன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன், வளர்ந்து வரும் நடிகையான டோம்னிக் ஃப்ஷ்பேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிவியல் பாதி சூப்பர் பவர் மீதி
வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளிலிருந்து ‘ப்ராஜெக்ட் பவர்’ முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படத்தின் பிரதான அம்சமாக வருவது ஒரு மாத்திரை. அதை உட்கொள்பவர்கள் தங்கள் உடல் அமைப்பைப் பொறுத்து அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு சூப்பர் பவரைப் பெறுவார்கள். ஐந்து நிமிடம் முடிந்தவுடன் மீண்டும் சாதாரண மனிதர்களாக மாறிவிடுவார்கள். அந்த மாத்திரையைப் பரிசோதிக்க அரசு அனுமதிக்காததால், போதைப்பொருள் என்ற போர்வையில் கள்ளச் சந்தையில் அதை ஓர் அமைப்பு விற்பனை செய்யும்.
அதை உட்கொள்பவர்களை வைத்து ஆராய்ச்சியும் செய்யும். அதை தொடர்ந்து உட்கொண்டால் பக்க விளைவுகளும் உண்டு. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்களை வேரறுக்கக் கிளம்புவார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர். அவருடன் உள்ளூர் போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு பள்ளி மாணவி இணைந்து செய்யும் சாகசங்களே ‘ப்ராஜெக்ட் பவர்’.
ஏற்கெனவே பழக்கமான சூப்பர் ஹீரோக்கள்
படத்தில் காட்டப்படும் சூப்பர் பவர்களில் புதிய ஆச்சரியங்கள் ஏதும் இல்லை. பல இடங்களில் அடுத்து நடக்கப்போகும் காட்சியை எளிதாகக் கணிக்கும் அளவிற்குத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘ஹல்க்’, ‘இன்விசிபல் மேன்’ போன்ற முக்கியமான சூப்பர் ஹீரோ படங்களில் வரும் கதாபாத்திரங்களைத் தழுவியே ‘ப்ராஜக்ட் பவர்’ படத்தின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
பிரபலமான சூப்பர் ஹீரோ படங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களான ‘ஃப்ரோஸன்’ மற்றும் ஜப்பானிய மொழியில் உருவான ‘நருட்டோ’ ஆகிய படங்களின் தாக்கமும் இருப்பது இத்திரைப்படத்தின் குறையாக இருக்கிறது.
இறுதியில் தீயவர்களை அழித்து, தனி மனிதனாக ஹீரோ வெற்றிபெறும் வழக்கமான கதைக்களம்தான் என்றாலும், காட்சியமைப்பு, ஒளிப்பதிவு மூலம் சுவாரசியம் கூட்ட முயன்றிருக்கிறார்கள் இயக்குநர்கள்.
இதன் அடுத்த பாகம் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த பாகங்களில் பிரத்யேகமான சூப்பர் பவர் கொண்ட கதாபாத்திரங்களைப் புகுத்தினால் மேலும் ரசிக்கும்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
- க.விக்னேஷ்வரன்