'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 18) காலை அறிவிக்கப்பட்டது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையில் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்பது தெளிவானது.
ஆனால் படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு இந்தியக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தனர். இதனிடையே, 'ஆதிபுருஷ்' படத்தின் கதை ராமாயணத்தை முன்வைத்துத் தான் உருவாகிறது என்பதை இயக்குநர் நாக் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "பிரபாஸ் அவர்களை கடவுள் ராமராகப் பார்ப்பது உற்சாகத்தைத் தருகிறது. மிகச் சில நடிகர்களே ராமராக இதற்கு முன் பெரிய திரையில் நடித்துள்ளனர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார் நாக் அஸ்வின். பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தின் இயக்குநர் என்பதால், இவரது ட்வீட் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.