சீக்கிரமாகக் குணமடைந்து வெளியே வா பாலு: சிவகுமார்

By செய்திப்பிரிவு

சீக்கிரமாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வா பாலு என்று சிவகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

இந்நிலையில் எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:

"பாலு. என்னை விட நீங்கள் 4 வயசு சின்னவர். அதனால் நாங்கள் உங்களை தம்பி என்றே கூப்பிடலாம். உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்க. நிறைகுடம். 100-க்கும் மேலான படங்களில் எனக்காக டூயர் பாடியிருக்கிறீர்கள்.

முதன் முதலில் நீங்கள் எனக்கு எந்தப் படத்தில் டூயட் பாடினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? மூன்று தெய்வங்கள் படத்தில் முள்ளில்லா ரோஜா பாடல் தான் நீங்கள் எனக்காகப் பாடிய முதல் பாட்டு. அதுக்கு அப்புறம் tongue twister மாதிரி ஒரு பாட்டுக் கொடுத்து கண்காட்சியில் பாடச் சொன்னார்கள். அதில் நீங்கள் பிச்சியிருப்பீர்கள்.

அதற்குப் பிறகு 'என் கண்மணி' என்ற பாடல் உலகமெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் இப்பவும் மறக்க முடியாதது, எனது 100 படத்தில் "மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" என்று பாடினீர்களே.

அதே போல் "உச்சி வகுந்தொடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி" என்ற பாடலுக்கு நீங்கள் கொடுத்த எமோஷனுக்கு 45 நாட்கள் காடுகளிலும், மலைகளிலும் நடந்து உதடுகளில் எல்லாம் ரத்தம் வரவைத்து நடித்தேன். வாழ்க்கையில் எத்தனையோ சவாலைச் சந்தித்தவர் நீங்கள். கரோனாவும் ஒரு சவால் தான். சீக்கிரமாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வா பாலு"

இவ்வாறு சிவகுமார் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE