'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? - சுனைனா மறுப்பு 

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகை சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார்

ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும், தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு நடத்தலாமா? என்கிற யோசனையிலும் இருந்தது.

வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளது.

பிக் பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் தேர்வு பட்டியலில் நடிகைகள் அதுல்யா ரவி, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு நடிகை சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுனைனா கூறியுள்ளதாவது:

ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என்று யோசிக்கிறேன். எப்போது எந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பியதில்லை.

இவ்வாறு சுனைனா கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியனும் இந்த தகவலுக்கு தனது பிறந்தநாளன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நேரலை பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE