இயக்குநர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்து வதந்தி: ரிதேஷ் தேஷ்முக் விளக்கம்

இயக்குநர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்துப் பரவிய வதந்திக்கு ரிதேஷ் தேஷ்முக் விளக்கம் அளித்துள்ளார்.

அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம்’, ஜான் ஆபிரகாமின் ‘ஃபோர்ஸ்’, ‘ராக்கி ஹேண்ட்ஸம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். 2005-ம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘டோம்பிவாலி ஃபாஸ்ட்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை தமிழிலும் மாதவனை வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது தவிர ஏராளமான திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிஷிகாந்த் ஹைதரபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தித்து வந்தார்கள்.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 17) காலை முதல் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

தற்போது, நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்து ரிதேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நிஷிகாந்த் கமத் செயற்கை சுவாச உதவியோடு இருக்கிறார். இன்னும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்காகப் பிரார்த்திப்போம்"

இவ்வாறு ரித்தீஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE