ப்ரித்விராஜ் நடிப்பில் மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவாகும் மலையாள திரைப்படம் 

நடிகர் ப்ரித்விராஜ் முழுக்க மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

'தி லயன் கிங்' (2019), 'அவதார்' உள்ளிட்ட திரைப்படங்கள் virtual production என்று சொல்லப்படும் மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவானவை. திரைப்படங்களில் வழக்கமாக பச்சை வண்ண சுவர் அல்லது திரைகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டு பின்னர் அந்த பச்சை நீக்கப்பட்டு கிராபிக்ஸில் தேவையான விஷயங்கள் சேர்க்கப்படும். ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பில் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைகளுக்கு முன்னால்தான் படப்பிடிப்பு நடக்கும். திரையின் பின்னால் அந்த காட்சிகள் விரியத் திரைக்கு முன்னால் நடிகர்கள் நடிப்பார்கள்.

ஏற்கனவே 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ். விமல், 'மகாவீர் கர்ணா' படத்தைத் தொடர்ந்து 'தர்ம ராஜ்யா' என்ற திரைப்படத்தை இதே போல மெய் நிகர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது இன்னொரு மலையாள திரைப்படமும் இதே பாணியில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே, மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ப்ரித்விராஜ் "திரைப்பட உருவாக்கத்தின் கலை மற்றும் அறிவியலில் இது ஒரு ஆச்சரியமான புதிய அத்தியாயம். மிக ஆர்வத்துடன் இதை எதிர்நோக்கியுள்ளேன். மாறும் காலம், புதிய சவால்கள், புதுமையான வழிமுறைகள் ! சொல்ல ஒரு அட்டகாசமான கதை ! படம் பற்றித் தொடர்ந்து தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் !" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது. தர்ம ராஜ்யா இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் திரைப்படம் என்று கூறப்பட்டாலும், இந்தப் படத்தின் போஸ்டரிலும் முழுக்க இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்தியத் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தப் படம் முதலில் வெளியாகிறதோ அதற்கு இந்தப் பெருமை சேரும் என்று எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் திரைப்பட ரசிகர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE