நான் நீயாக மாறிவிட்டேன்; நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய்: மறைந்த சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு

நான் நீயாக மாறிவிட்டேன்; நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய் என்று மறைந்த சேதுராமன் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அதற்குப் பிறகு 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராகவும், திரையுலகினர் பலருக்குத் தோல் மருத்துவராகவும் இருந்தார்.

கடந்த மார்ச் 26-ம் தேதி சென்னையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மனைவியின் பெயர் உமையாள். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

சேதுராமன் மறைவின்போது உமையாள் 2-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பலரும் சேதுவே மகனாகப் பிறந்திருப்பதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தற்போது தனது கணவர் சேதுராமன் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் உமையாள். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கு பிடித்தவைகளும் உனக்கு பிடிக்காதவைகளும்

- எனக்கு திடீர் ஆச்சரியங்கள் பிடிக்கும் - உனக்கு திடீர் ஆச்சரியங்கள் பிடிக்காது.

- நான் உணர்வுகளை வெளிப்படுத்துபவள் - நீ அதை சாதாரணமாக வைத்துக் கொள்வாய்.

- எனக்கு வீட்டில் சாப்பிடப் பிடிக்கும் - உனக்கு ஹோட்டலில் சாப்பிடப் பிடிக்கும்

- நான் தூங்கி எழுந்ததும் அனைத்தையும் மறந்து விடுவேன் - நீ தூங்கி எழுந்தாலும் நினைவில் வைத்துக் கொள்வாய்.

- எனக்கு உன்னை ஆசுவாசப்படுத்தப் பிடிக்கும் - உனக்கு ஆசுவாசமாக இருக்கப் பிடிக்கும்

- நாம் சாய்ந்து அழுவதற்கு உன் தோள்களை நாடுவேன் - நீ புன்னகைத்து என் கண்ணீரைத் துடைப்பாய்.

- எல்லாம் சரியாக இருப்பது போல நான் நடிப்பேன் - ஒரு சின்ன விஷயம் சரி இல்லையென்றாலும் கூட உன்னால் ஒரு நொடி கூட நடிக்க முடியாது.

- நான் சிறிய முடிவுகளைச் சுலபமாக எடுப்பேன் - நீ பெரிய முடிவுகளைச் சுலபமாக எடுப்பாய்.

- நான் அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காக அனைத்தையும் செய்வேன் - நீ உன்னுடைய மகிழ்ச்சிக்கும் அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கும் அனைத்தையும் செய்வாய்.

- விஷயங்கள் கைமீறிச் செல்லும்போது நீ என்னை உணரவைக்கும் விதம் எனக்குப் பிடிக்கும் - உனக்கான விஷயங்களை நான் உன்னைச் செய்ய அனுமதிப்பது உனக்குப் பிடிக்கும்.

- உன்னோடு ஷாப்பிங் செய்வது எனக்குப் பிடிக்கும் - உனக்குத் தனியே ஷாப்பிங் செல்வது பிடிக்கும் ( ஏனெனில் நீ வாங்கும் அதே சட்டை உன்னுடைய அலமாரியில் ஏற்கெனவே இருப்பது உனக்கு நினைவிருக்காது)

- நான் அனைத்தும் மெதுவாகவே செய்வேன் - நீ அனைத்தையும் மின்னல் வேகத்தில் செய்வாய்.

- ஒரு விஷயத்தைச் செய்யும்முன் நான் யோசித்து என் மனதிடம் கேட்டுக் கொள்வேன் - நீ கண்களை மூடி உன் இதயம் சொல்வதைச் செய்வாய்.

- எனக்குப் புகைப்படம் எடுப்பது பிடிக்கும் - உனக்கு போஸ் கொடுப்பது பிடிக்கும்

- நான் உணர்வுரீதியாக வலிமையானவள் - உன்னைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளை நீ விரும்புவதில்லை.

- இனிப்புகளுக்கு நான் நோ சொல்பவள் - நீ இனிப்புகளுக்கு எப்போதும் நோ சொல்வதில்லை (குறிப்பாக காஜு கத்லி)

- நான் என்னுடைய உணவை ஒரு நிமிடத்தில் வேகமாக உண்பவள் - நீ உணவின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்துச் சாப்பிடுவாய், அது வீடாக இருந்தாலும் அல்லது ஹோட்டலாக இருந்தாலும் சரி.

- நான் அனைத்தையும் என்னோடு வைத்துக் கொள்பவள் - உன் மனதில் உள்ளதை அடுத்த நிமிடம் உன்னால் பிறரிடம் பகிராமல் இருக்கமுடியாது.

- எனக்குக் கண்விழித்து எழுதுவது பிடிக்கும் - உனக்குத் தூக்கத்தில் கனவு காண்பது பிடிக்கும்.

- நான் உன்னை நேசிக்கிறேன் - நீ சஹானாவை நேசிக்கிறாய்

- நான் நீயாக மாறிவிட்டேன் - நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய், நான் ஒவ்வொரு நாளும் உன்னையும் சஹானாவையும் அன்போடு பார்த்துக் கொள்வேன்.

அன்புடன்

உமா சேதுராமன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE