எஸ்.பி.பி அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்பதில் மகிழ்ச்சி: ரஜினி

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 16) எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

தற்போது எஸ்.பி.பி குறித்து ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்புக்குரிய எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்த பல படங்களுக்கு, அவருடைய அறிமுகப் பாடலை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE