எங்களுக்காகத் திரும்ப வாருங்கள் எஸ்.பி.பி சார்: குஷ்பு உருக்கம்

எங்களுக்காகத் திரும்ப வாருங்கள் எஸ்.பி.பி சார் என்று குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஆகஸ்ட் 16) எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல் வெளியானதிலிருந்து, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்தனர். பலரும் அவருடன் பணிபுரிந்த நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"எஸ்.பி.பி சார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தினசரி வாழ்க்கையில் கூடவே இருக்கிறார். அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. ஏனென்றால், எப்படி தினமும் எழுந்து கடவுளைக் கும்பிடுகிறோமோ, அதே மாதிரி அவருடைய பாடல்களைக் கேட்காமல் யாராலும் இருக்க முடியாது.

என்னால் இருக்கவே முடியாது. காலையில் எழுந்தவுடன், வேலை செய்யும் போது, தூங்குவதற்கு முன்பு, பயணிக்கும் முன்பு என அவருடைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் தான் கடவுள் மாதிரி இருக்கிறார். என்னுடைய தொலைபேசியில் அவருடைய எண்ணை 'SPB - The God'என்று தான் வைத்திருக்கிறேன்.

கடவுளுக்குச் சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னை மாதிரி அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்ப வருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு கோவிட் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவர் திரும்பி வந்துவிடுவார், வரணும். எங்களுக்காகத் திரும்ப வரவேண்டும், பாட்டுப் பாட வேண்டும்.

எங்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும். நான் அவரை மறுபடியும் சந்தித்துப் பேச வேண்டும். அவருடைய குரலைக் கேட்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும். ஆகவே, எஸ்.பி.பி சார் உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். வாங்க, திரும்பி வாங்க. நீங்கள் வருவீர்கள் ஏனென்றால் நீங்கள் வலுவானவர். உங்களை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்க்கவே முடியாது. உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எங்களுக்காகத் திரும்ப வாருங்கள் எஸ்.பி.பி சார்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE