தோனியை மேற்கொளிட்டு சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டியுள்ள சீனு ராமசாமி

தோனியின் செயல்களை மேற்கொளிட்டு சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி, நேற்று (ஆகஸ்ட் 15) இரவு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்குப் புகழாரம் சூட்டி சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். தோனி ஓய்வு தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் "எங்களை அதிகபட்சம் ஊக்குவித்ததற்கும், பொழுதுபோக்கியதற்கும் உங்களுக்குப் பெரிய நன்றி.

நீங்கள் என்றுமே ஒரு அற்புதமான தலைவர் தோனி. எங்களை ஆச்சரியப்படுத்த உங்களிடம் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். உங்கள் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகக் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமாசாமி "சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் நட்சத்திரமாக ஆன நீங்களும் அதிக ஊக்கமும், பொழுதுபோக்கும் தந்தவர் சிவகார்த்திகேயன்.

தோனியைப் போலவே உங்கள் களத்தில் பெரும்பாலும் புதியவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாய்ப்பு தந்தீர்கள். அடிமட்டத்திலிருந்து வந்து நீங்கள் இருவரும் வெற்றி பெற்றீர்கள்" என்று தெரிவித்தார். இந்த ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சீனு ராமசாமியின் இந்த ட்வீட்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகார்த்திகேயன், "சார், உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது எனக்கு ஊக்கம் தருகிறது. இன்னும் கடினமாக உழைப்பேன், என்னை இன்னும் சிறந்த மனிதனாக, நடிகனாக ஆக்கிக் கொள்வேன். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிக முக்கியமானவை சார்” என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE