நீங்கள் இல்லாத குறையை இந்திய அணி உணரும்: தோனிக்கு புகழாரம் சூட்டிய கமல்

நீங்கள் இல்லாத குறையை இந்திய அணி உணரும் என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கமல்

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி.

இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி, நேற்று (ஆகஸ்ட் 15) இரவு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஒய்வு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தற்போது தோனியின் ஓய்வு அறிவிப்புக்குப் பலரும் உணர்வுப்பூர்வமாக தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். தோனி ஒய்வு குறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள தோனி.. விளையாட்டிலும் வாழ்க்கையிலும் சாதிக்க தன்னம்பிக்கை எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டியதற்கு நன்றி. ஒரு சிறிய ஊரிலிருந்து வந்து தேசத்தின் நாயகனாக வளர்ந்த வரை, நீங்கள் திட்டமிட்டு எடுத்த முயற்சிகள், அமைதியான நடத்தை ஆகியவை இல்லாத குறையை இந்திய அணி உணரும். சென்னையுடனான உங்கள் காதல் கதை தொடர்வதில் மகிழ்ச்சி"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE