50வது ஆண்டு தொடக்க விழா - பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் யாஷ் ராஜ் பிலிம்ஸ்

By ஐஏஎன்எஸ்

மறைந்த பிரபல தயாரிப்பாளரான யாஷ் சோப்ராவின் 88வது பிறந்தநாள் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வரவுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாகவுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது ஆண்டையும் கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘மொஹப்பத்தேய்ன்’, ‘தூம்’, உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனர் யாஷ் சோப்ரா கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார். அன்று முதல் அவரது மகன் ஆதித்யா சோப்ரா யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி யாஷ் சோப்ரா பிறந்தநாளின் போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த அறிவிப்பை ஆதித்யா சோப்ரா வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ‘ஜீரோ’ படத்தின் தோல்வியால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த ஷாரூக் கான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பையும் ஆதித்யா சோப்ரா வெளியிடவுள்ளார். இது தவிர்த்து அஜய் தேவ்கன், விக்கி கவுஷல் ஆகியோர் நடிக்கவுள்ள படங்களின் அறிவிப்பையும் வெளியிடவுள்ளார். இந்த படங்கள் பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

2021 தொடங்கி 2022 ஆண்டு இறுதிக்குள் இப்படங்களை திரைக்கு கொண்டு வரவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE