அப்பா நன்றாகத் தேறி வருகிறார், தொடர்ச்சியாகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு நேற்று (ஆகஸ்ட் 14) மோசமடைந்தது.
நேற்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 15) மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில் கூட "எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்பா எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
» ஒரு நாள்; ஐந்து ரஜினி படங்கள்- நினைவலைகள்
» பொதுமுடக்கத்தால் பிழைப்புக்கு வழியில்லாத மக்கள்; தேடிப்போய் உதவிடும் நகைச்சுவை நடிகர் சேசு!
"அனைவருக்கும் வணக்கம், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும், பலர் என்ன அழைத்துப் பேசி வருகின்றனர்.
அப்பா நன்றாகத் தேறி வருகிறார். நேற்று வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி) பொருத்தியிருந்தார்கள். அது அவருக்கு உதவி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மீள்வதற்கான அறிகுறிகளை அப்பா காட்டி வருகிறார். மருத்துவர்களும், நாங்களும் நம்பிக்கையாக இருக்கிறோம்.
நேற்றை விட நுரையீரல் நன்றாக இயங்குகிறது. இன்னும் சில காலத்தில், இன்றோ நாளையோ அல்ல, ஆனால் விரைவில் அப்பா இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு விடுவார். சீக்கிரமாகக் குணமடைவார். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து தகவல்களை நான் பகிர்கிறேன். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அதைத் தொடருங்கள்"
இவ்வாறு எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.