ரஜினி - அஜித் இருவருக்கும் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் 'அபூர்வ ராகங்கள்'. பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலமே நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த்.
ஆகையால், இன்றுடன் (ஆகஸ்ட் 15) ரஜினி திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இதற்காக ரஜினியை தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார் அஜித் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்தாண்டு ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானது. அப்போது ரஜினி - அஜித் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
» சொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்
» சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ். ஆர். ரெட்டி பற்றிய பயோபிக் - இயக்குநர் தேவ் கட்டா அறிவிப்பு
ரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் என்ற செய்தி வெளியானதும், பலரும் இதைப் பகிரத் தொடங்கி வைரலானது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, "அஜித் யாரிடமும் பேசவில்லை. அவர் வீட்டில் குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிட்டு வருகிறார்" என்று முடித்துக் கொண்டார்கள்.
படங்களில் நடிப்பதைத் தாண்டி, திரையுலகினரிடமிருந்து விலகியே இருக்கிறார் அஜித். ஆகையால் ரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் செய்தி வதந்தியே என்பது உறுதியாகியுள்ளது.